பொரியல்

1.முளைக்கீரை பொரியல்

  • கீரை - ஒரு கட்டு
  • சின்ன வெங்காயம் - பத்து (பொடியாக நறுக்கியது)
  • வரமிளகாய் - இரண்டு
  • உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி
  • தாளிக்க:
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி



கீரையை நன்றாக அலசி வைக்கவும். அலசிய கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதில் சுத்தப்படுத்திய கீரையை சேர்க்கவும்.
கீரை வதங்கியதும் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
ஒரு நிமிடம் வதங்கியதும் இறக்கவும். சூடான சுவையான கீரை பொரியல் ரெடி.





2. அவரைக்காய் பொரியல்




  • பட்டை அவரைக்காய் - நூறு கிராம்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • முட்டை - ஒன்று
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • கடுகு - சிறிது



அவரைக்காய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி தேவையானவற்றை எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி நன்றாக அவரைக்காய் வெந்ததும் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டை அவரைக்காயில் நன்றாக படுமாறு எல்லா புறமும் பிரட்டி விட்டு வேக வைக்கவும்.
முட்டை அவரைக்காயுடன் ஒட்டி உதிரியாக வந்ததும் அடுப்பை நிறுத்தி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.


3. வாழைத்தண்டு பொரியல்




  • வாழைத்தண்டு - ஒன்று (சிறியது)
  • முருங்கைக்கீரை - ஒரு கப்
  • கடலைப்பருப்பு - 50 கிராம்
  • சின்ன வெங்காயம் - 20
  • வரமிளகாய் - 4
  • தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • உளுந்து - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு



வாழைத்தண்டை நார் எடுத்து பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். கீரையை சுத்தப்படுத்தி கழுவி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய், வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
அதனுடன் கீரையை போட்டு வதக்கவும்.
குக்கரில் வாழைத்தண்டு, கடலைபருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
கீரை வெந்ததும் வேக வைத்த வாழைத்தண்டு கடலைப் பருப்பு போட்டு உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
கடைசியில் தேங்காய் துருவல் போட்டு பரிமாறவும்.



4. குடைமிளகாய் பொரியல்




  • குடைமிளகாய் - ஒன்று
  • உருளைக்கிழங்கு - 4 சிறியது (பெரியதாக இருந்தால் 2)
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - கால் பகுதி
  • பூண்டு - 3 அல்லது 4 பல்
  • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  • மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • தாளிக்க:
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - தேவைக்கு ஏற்ப



வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து தட்டி வைத்துள்ள பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
காய் சிறிது வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். உப்பின் அளவை சரிப் பார்த்துக் கொள்ளவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
தண்ணீர் வற்றியதும் சுருள கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான குடைமிளகாய்-உருளைக்கிழங்கு பொரியல் தயார்.





5. காரட் பொடிமாஸ்




  • காரட் - 3
  • வெங்காயம் - 1
  • பூண்டு - 5
  • பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
  • கொத்தமல்லி - சிறிதளவு



வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். காரட்டை துருவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு துருவிய காரட் சேர்த்து வதக்கவும்.
உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான காரட் பொடிமாஸ் ரெடி.



6. ப்ரோக்கோலி பொரியல்




  • ப்ரோக்கோலி - ஒன்று
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • இஞ்சி - சிறிது
  • பூண்டு - 5 பல்
  • வரமிளகாய் - 2
  • கொத்தமல்லி தழை - சிறிது
  • உப்பு - தேவைக்கு
  • தாளிக்க :
  • கடுகு - சிறிது
  • கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • எண்ணெய் - தாளிக்க



முதலில் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.மிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
ப்ரோக்கோலியை ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது மல்லித் தழையை போட்டு வதக்கவும்
நன்கு வதங்கியதும் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு வேக வைத்த ப்ரோக்கோலியை போட்டு தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டி எடுக்கவும்.
சுவையான சத்தான பொரியல் ரெடி.





7. கத்திரிக்காய் பிரட்டல்




  • கத்திரிக்காய் - 5
  • வெங்காயம் - 2
  • தக்காளி - பாதியளவு
  • மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து



தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்து கொள்ளவும்.
கத்திரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். வேர்கடலையையும், தேங்காய் துருவலையும் தனித் தனியே வாணலியில் வறுத்து வேர்கடலையை தோல் நீக்கி விட்டு இரண்டையும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்பு நறுக்கின கத்திரிக்காய்களை சேர்த்து நன்கு பிரட்டி சிறிதளவே தண்ணீர் தெளித்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேக விடவும்.
பின்பு மூடியை திறந்து கிளறி விட்டு நன்கு வெந்து இருக்கும் நிலையில் பொடித்த வேர்க்கடலை பொடியை தூவி பிரட்டி விட்டு சிம்மிலேயே இரண்டு நிமிடங்கள் விடவும்.
நன்கு எல்லாம் பிரண்டு வாசமாக இருக்கும். அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கவும். இதை சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.